90% கிராமங்களில் மொபைல் இணைப்பு...


K.D.D.

11JAN
2016 
இணையப் பயனாளர் எண்ணிக்கையில், அமெரிக்காவை மிஞ்சும் வகையில் முன்னேறியுள்ள நிலையில், இந்தியாவில் 90% கிராமங்களில், மொபைல் இணைப்பு சாத்தியமாகியுள்ளது எனத் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அறிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள, 5 லட்சத்து 97 ஆயிரத்து 608 கிராமங்களில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 939 கிராமங்களில் தற்போது மொபைல் இணைப்பு கிடைத்து வருகிறது. இன்னும் 55,669 கிராமங்களுக்கு மட்டுமே மொபைல் இணைப்பு வழங்க வேண்டியதுள்ளது. இது மொத்த கிராமங்களின் எண்ணிக்கையில் 9.31% மட்டுமே.
மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் தான் இது மிக அதிகமாக உள்ளது. 152.36% இணைப்பு இங்கே உள்ளது. கிராமப்புறங்களில், 48.79% மொபைல்போன் இணைப்பு தரப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில், 4ஜி இணைப்பு வேகமாக வளர்ந்து வருகையில், கிராமப் புறங்களில், இன்னும் 2ஜி இணைப்புதான் முதன்மையாக உள்ளது. இருப்பினும், கிராமப் புறங்களை, நகர்ப்புற அளவிற்குத் தகவல் தொழில் நுட்பத்தில் உயர்த்த அரசு முனைந்து வருவதாக, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். 2017ல், கிராமங்களில், மொபைல் போன் இணைப்பினை 70% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020க்குள், இந்தியா முழுவதும், 100% மொபைல் இணைப்பினை உயர் நிலையில் தரும் மிகப் பெரிய அளவிலான இலக்கினை அரசு கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 40 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், (87%) தங்கள் மொபைல் போன்களின் வழியே தான், இணையத்தை அணுகித் தங்கள் தேடலை மேற்கொள்கின்றனர். இந்த தகவலை, இணையம் மற்றும் மொபைல் போன் பயன்பாட்டிற்கான இந்திய அமைப்பு (Internet and Mobile Association of India (IAMAI)) வெளியிட்டுள்ளது.

THANKS - THINAMANI

Share this

Related Posts

Previous
Next Post »